பிரமிள் கவிதைகள் - மோஹினி, பச்சைக் கதை | Poems of Pramil - Mohini, Pachai kadhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • பிரமிள் கவிதைகள் - மோஹினி, பச்சைக் கதை
    Poems of Pramil - Mohini, Pachai kadhai
    "மோஹினி" - பிரமிள்
    ‘உனக்கே
    உனக்கு நான்’ என
    சப்தித்த நின் பார்வைகள்
    உன் முகம் நீங்கி
    எட்டாத நிலவாயிற்று.
    வக்கரித்துத் தரையில்
    இலைப்பார்வை பரப்பிற்று.
    வழிதொறும்
    நிழல் வலைக் கண்ணிகள்
    திசை தடுமாற்றும் ஓர்
    ஆயிரம் வடுக்கள்.
    வேதனை வேர் நரம்பெழுந்து
    மூடியது கானகம்.
    எதிரே
    தலைமயிர் விரித்து
    நிலவொளி தரித்து
    கொலு வீற்றிருந்தாள்
    உன் நிழல்.
    என் மன விகற்பத்தின்
    வெண் இருள்
    நிழலை வளைத்து
    துளி வேல்கள் ஏந்தின
    கருநீல முட்கள்.
    உயரத்தே ஒரு கணம்
    பார்வையைப்
    பறிகொடுத்து
    ஊளையிட்டது நிலவு.
    அது கணம்
    வெண்நிழல் அழைத்தது.
    அணுக
    அவளை என்
    பாதங்கள் துணிந்து
    அணுகக் கருநீல
    வேல் நுனிகளில் என்
    உதிரத்தின் மலர்ச் செம்மை.
    முட்கள்
    மொக்க விழ்கின்றன.
    விரிகிறது
    இதழ் வேளை.
    ஊன்றி எடுத்த என்
    பாதத்தில் ஊறி
    உதிரத்தில் ஒலித்ததுவோ
    நிலவின் விஷ ஊளை.
    நாநுனி தவித்து
    துளியளவு தீண்டி
    பதிவுகள் தொடர
    திசையறும்
    வெண் இருளில்
    ரகஸியக் கிணறு.
    அதில் எரிகிறது
    ஈரநெருப்பு.
    குனிந்து பறந்து
    கீழ்நோக்கி எழுகிறேன்.
    தத்தளித்து
    தாகம் தணித்த
    நீர்வெளி
    பாறையாய் இறுகி
    என் புதைவை
    சிறையிடுகிறது
    கல்பீடம் ஆகிறது.
    நிலவின் ஊளை வெளிறி
    பலிசிந்தி வீழ
    அவளது தந்தங்கள்
    வெறிக்கின்றன.
    ஓ! என்
    பணிவுகளை உறிஞ்சும்
    பலி பீடமடி நீ!
    பசிதணிந்து
    பசிகொண்டு
    பாறை தளர்ந்து
    தசை வெளியாய்
    தத்தளித்து
    பசியேற்றி
    அசைகிற சுழலே,
    இன்று கொட்டும்
    இருளின் தமுக்கில்
    நம் இருவர் தசைகளில்
    தீராத
    தினவுகள் அடியே!
    "பச்சைக் கதை" - பிரமிள்
    கானகத்தினுள்
    பசுமைச் சாறுபொங்க
    துடிக்கிறது
    “அல்ல, அல்ல” என்ற உன்
    சொல்லின் தாளகதி.
    சற்றே நிழல்களுள் சரிகிறேன்,
    வழிதடுமாறாத களைப்பு.
    எதிர்வரும் என் வேளைகளினுள்
    உன்னைச் சிறைபிடிக்கின்றன
    தீர்க்க தர்சனங்கள்.
    தளிரே - என் மன எலும்பு
    உன்னகத்தில் கிளைபடர
    இலைமுகம் கொள்கிறாய் நீ.
    நாம் எதிலும்
    மறைமுகப்பொருள்களை
    சர்ச்சிக்க வேண்டாம்.
    எது மறை பொருள்?
    இந்த உருகிய மறுப்புகளின்
    உரம்தான் - அவ்வுரம்
    உன்னுள் என்கிளையின்
    பணியாத பக்திகளாகட்டும்
    பளுவற்றுச் சிறுசிறு
    பச்சைச் சிறகுகளில்
    எழுந்து தத்தளிக்கட்டும்.
    சிறகுகளில் சில
    துடிப்பு அணைந்து
    மண்வண்ணமாகும்
    வீழும்.. வீழினும் உரமாகும்.
    மீந்திருப்பவற்றுள்
    விளைகின்றன புதர்த்தீ இருள்கள்
    உணவுகள்
    விஷங்கள்
    முட்கள்
    முட்கள்
    ஸ்தாவர மான்களும் புலிகளும்.
    நகங்கள் என்னைக் கிழிக்கின்றன
    ஆயின் உன்
    மூலிகை இலைக்கண்கள்
    சிகிச்சையளிக்கின்றன.
    #pramil #pramilpoems #booktube #tamilliterature #puthagavanam

Комментарии • 2